தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்பு குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரசிங்கம் (56) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு அலுவலரான தன்னை தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வீரசிங்கத்தை நேற்று கைது செய்தனர்.




